‘கவியரசு’ கண்ணதாசனை பின்னுக்குத் தள்ள, ‘கவிப்பேரரசு’ பட்டம் போட்டுக் கொண்ட வைரமுத்துவின் அரிப்புக்கு ஈடான அரிப்பு இது.
“அந்த மேதை எங்கே; நான் எங்கே?” என்று வெளியில் கைகட்டி பவ்யம். உள்ளுக்குள்ளோ அதைத் தாண்டிக் குதிக்க சந்தர்ப்பம் தேடி அலைச்சல்.
அரிப்பு இருக்கும் அளவுக்கு கொஞ்சம் சரக்கும் இருந்திருந்தால் கமலின் மானம் இப்படிக் கப்பலேறியிருக்காது.
கிளைமாக்சில் சுனாமி வந்ததற்கு உண்மையான காரணம் என்ன?
“பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க!”
– இது அசின் போன்ற அரை லூசு ஆத்திகக் கும்பலுக்கு.
“கிருமியைக் கொல்ல.”
– இது பாராட்டி விழா எடுக்கக் காத்திருக்கும் கி. வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுக் கோஷ்டிக்கு.
உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது.
உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே!
மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே!
பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலை ஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!
அது சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு சிலையை கரையில் சேர்த்து என்ன பிரயோஜனம்?
பழையபடி சிதம்பரம் கோயிலுக்குள் அதைக் கொண்டு வைப்பது யாராம்?
சிதம்பரம் தீட்சிதர்களைக் கேட்டு சீக்கிரம் அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டாமோ! அவசரப்பட்டு அடுத்த சுனாமியை பெருமாள் சாமி அனுப்பிச்சிடப் போறார்.
“கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்” என்ற வசனம் கடவுள் இல்லை என்பதைத்தானே சொல்கிறது?
“நீ ஆம்பளைதானே?” என்ற கேள்விக்கு “அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என பதில் சொல்லும் ஜென்மம் எது?
கண்டிப்பாக ஆணுமில்லை, பெண்ணுமில்லை;
இடைப்பட்ட ஏதோவொண்ணு.
“இருக்கிறாரா, இல்லையா?” என்ற கேள்விக்கு ‘இருக்கு’, ‘இல்லை’ என்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே.
“கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?” எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால்… சந்தேகமே வேணாம்… கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம்.
புகழாரம் இன்னும் கொஞ்சம் நீண்டு “வசனங்களை எழுதியவர் கமலா? பெரியாரா?” என பட்டிமன்றம் நடத்தாத வரைக்கும் நாம் தப்பித்தோம்.
கண்டங்கள் பல தாண்டி, பல தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்த கோவிந்த ராமசாமி ஒரு பெண்ணிடமிருந்து தம்மாத்துண்டு டப்பியை பிடுங்க இத்தனை பாடா?
அந்தப் பெண் ஒரு அக்ரகாரத்து மாமி என்பதைக் கணக்கில் கொண்டால் கலைஞானியின் ‘நூல்’ அரசியல் புலப்படும்.
தில்லை வாழ் அந்தணர்களிலிருந்து தில்லி ‘எய்ம்ஸ்’ வாழ் அந்தணர்கள் வரை அதைத்தான் சொல்கிறார்கள்.