வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்:

கமலஹாசனுக்கு உலக நாயகன் பட்டம்!

 

 

ஜூன் 12.

‘தசாவதாரம்’ ரிலீசுக்கு ஒரு நாள் முன்தினம்.

வழக்கொன்று வந்தது உச்ச நீதிமன்றத்தில்.

வழக்கம்போல் தள்ளி வைக்கவில்லை.

காரணம், வழக்காடியவர்கள் புறப்பட்ட இடம் அப்படி.

விடுமுறையென்றாலும் வீட்டிலிருந்தேனும் விசாரித்தாக வேண்டும்!

விசாரித்தார்கள்.

“முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு போடுங்கள் வழக்கை” என்றார்கள்.

‘நாங்கள் இருக்கிறோம்’ என்று ரகசிய ஜாடை காட்டி, தைரியமூட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.

படம் வந்து வாரம் நான்காகி விட்டது.

வழக்கையும் காணோம், ஒரு புண்ணாக்கையும் காணோம்.

என்ன ஆச்சு?

 

 

12 ஆம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையைச் சொல்லி இந்துக்களின் மானத்தைக் கூண்டிலேற்றுகிறார் கமல் என்ற குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என அறிந்து, வருந்தி ஜகா வாங்கி விட்டார்களா?

‘இருக்கலாம்’ என்பவர்கள் அப்பாவிகள்.

சுஜாதா செத்துப்பூட்டாரு, பாலச்சந்தருக்கு வயசாயிடுச்சு, மணிரத்னத்துக்கோ முடியல. கொஞ்சம் வெவரஞ் தெரிஞ்சவாளா இருக்குற இவரையும் பகைச்சுக்கிட்டா கோடம்பாக்கத்துல நமக்கு ஆளில்லாமப் போயிடுமேங்கிற கரிசனையால அடக்கி வாசிக்கிறார்களோ….?

அப்படியும் இருக்கலாமென்பவர்கள் உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
இப்படி யோசித்துப் பார்க்கலாம்.

ஓடாத படத்தைத் தடை செய்து ஓடவைக்க சில தயாரிப்பாளர்களே பினாமிகளின் பெயரில் கோர்ட்டுக்குப் போவார்கள்.

ஆஸ்கார் ரவிச்சந்திர அய்யரின் பினாமியாக இராம. கோபாலய்யர் ஏனிருக்கக்கூடாது?

போஸ்டரில் அவர் பெயர் இல்லாவிட்டாலென்ன? ‘சைலன்ட் பார்ட்னராக’ இருக்கலாமில்லையா?

வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை எனும் அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கிறது.

இந்த அறிவிப்பு மட்டும் போதுமா?

வரலாறு எங்கே முடிகிறது, கற்பனை எங்கே தொடங்குகிறது என்று சொல்ல வேண்டாமா?

இரண்டாம் குலோத்துங்கன், ரங்கராஜன் நம்பி சைவ – வைணவ யுத்தம், ‘ஓம் நமோ நாராயண நமஹ…’ இவையெல்லாம்தான் வரலாறு என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருக்க, மல்லிகா ஷெராவத், பிளெட்சர், கிளப் டான்ஸ் சமாச்சாரங்கள்தான் வரலாறு, மற்றதெல்லாம் கப்ஸா என்று மற்றவர்கள் எண்ணி குழம்பிவிடக்கூடாது அல்லவா!

ஒரு படைப்பாளனின் நேர்மை அவன் சொன்ன செய்தியில் மட்டுமல்ல, சொல்லாமல் விட்ட சங்கதிகளிலும் இருக்கிறது.

பம்பாயில் இந்து – முஸ்லீம் கலவரத்தைச் சொன்ன படைப்பாளி மணிரத்னம், கலவரத்துக்குக் காரணமான பாபர் மசூதி இடிப்பைத் திட்டமிட்டே மறைத்ததுபோல்…

‘ஜென்டில்மேன்’ முதல் ‘சிவாஜி’ வரை கல்வி வியாபாரமாகி விட்டது என புலம்பும் ஷங்கர் கூட்டணி, அது தனியார் மய – தாராளமய தாசர்களால் நேர்ந்தது என்பதைச் சொல்ல மறுப்பது போல்…

கிரிமி யுத்தத்தின் பூர்வ ஜென்மத் தொடர்பை ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகியில் தேடுவதற்குப் பதில் கையில் கிடைத்த புராணக் குப்பைகளில் அலசியிருக்கிறார் கமல்.

கடலில் தூக்கிப் போடப்பட்ட பெருமாள் சிலையை மீண்டும் கரைக்குக் கொண்டு வரவே சுனாமி வந்ததாம்.

அதாவது இயற்கைச் சீற்றம் ஒரு புராணத்துடன் முடிச்சுப் போடப்படுகிறது.

ஜெயேந்திரனைக் கைது செய்ததால்தான் சுனாமி வந்தது என சங்கர மடத் துதிபாடிகள் அப்போது சொன்னதை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னதற்கு வயிற்றெரிச்சல் காரணம். பின்னவருக்கு?

பார்ப்பனிய விஷமத்தனம் காரணம்.

ஆன்மீக முட்டாள் ரஜினியை விட, அரைகுறை அறிவாளி கமல் உண்மையில் ரொம்ப

ஆபத்தானவர்.

தசாவதாரத்தைக் கிழிகிழியெனக் கிழிக்கும் விமர்சகர்களில் சிலரும் கொண்டாடும் புரட்சிப் படம் ஹேராம்.

ஹேராமின் நாயகன் யார்?

காந்தியைக் கொன்றவன்.

கொல்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் – அதன் வழி இந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த முசுலீம்களையும் கருவறுக்க வசதியாக தன்னுடைய பெயரை ஒரு முசுலீம் பெயராக்கிக் கொண்ட ஒரு ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்.

அவன் பெயர் கோட்சே.

அந்தக் கோட்சேவைத்தான் நாயகனாக்கினார் கமலஹாசன்.

அதுசரி, ஒரு கிரிமினலை கதாபாத்திரமாக்கும் உரிமை ஒரு படைப்பாளிக்கில்லையா?

இருக்கிறது.

ஆனால், இது வெறும் படைப்பாளியின் உரிமை பற்றிய விசயமில்லை. அந்தக் கதையை எந்தப் பாத்திரத்தின் வழியாக  அந்தப் படைப்பாளி சொல்கிறார் என்பதே கேள்வி.

வேலு நாயக்கர் என்ற ரௌடியாக,

பொம்பளைப் பொறுக்கியாக,

மோசமான மனநோயாளியாக வந்தபோதெல்லாம் அவரின் வக்கிரங்களைக் கண்டு ரசிகர்கள் கண்களைப் பொத்திக் கொள்ளவில்லை.

மாறாக கைதட்டி ரசித்தார்கள். பாத்திரத்தில் தன்மையோடு ஒன்றிப் போனார்கள்.

‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் உள்ள நடிகன் ஏற்கும் எந்தப் பாத்திரமும் ரசிகரிடம் அப்படித்தான் போய்ச் சேரும்.

கோட்சேவும் அப்படித்தான் போய் சேர்ந்திருக்கக்கூடும்.

ஒருவகையில் கோட்சே தரப்பு ‘நியாயங்களை’ ஹேராம் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார் கமல்.

சிவசேனாவும், வி.எச்.பி.யும் அரசியல் தளத்தில் செய்யும் பணியை கலைத்துறையில் செய்திருக்கிறார் இந்தக் கலைஞானி.

செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்திருக்கிறோமா என்று சரிபார்க்க ‘பம்பாய்’ படத்தின்போது பால்தாக்கரேவின் காலில் விழுந்தார் மருமகன் மணிரத்னம்.

புஷ்ஷின் அங்கீகாரத்திற்காக அலைந்து திரிந்தார் மாமா கமலஹாசன்.

நல்ல கலைக்குடும்பம்.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ற ஹிட்லரின் நாஜிக் கொடூரத்தைப் பதிவு செய்யும் ஒரு எழுத்தாளன் அடுத்த வரியில் ‘குழந்தைகளென்றால் ஹிட்லருக்குக் கொள்ளைப் பிரியம்’ என்று ஒரு பாராட்டையும் சேர்த்து எழுத முடியுமா?

படம் சொல்லும் அரசியலை ஒரு ஓரம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு நடிகனாக கமலின் பன்முக ஆற்றலைப் பார்க்க நம் கழுத்தைப் பிடித்து திருப்புகிறார்களே….! அவர்கள் முடியுமென்று சொல்கிறார்கள்.

‘கடைந்தெடுத்த கிரிமினல்’ என்று உலகமே காறி உமிழ்கிறது ஜார்ஜ் புஷ் முகத்தில்.

‘உலக நாயகனே வா… வா…’ என்று கும்மியடித்துக் குலவையிடுகிறார் கமலஹாசன்.

ஒரு மோசமான அரசியலை முன்னெடுக்கும் படைப்பில் நல்ல விசயங்களைத் தேடி பூதக் கண்ணாடியோடு கிளம்புபவன் நல்ல விமர்சகன் அல்ல. அந்த ஆளோட ரசிகர் மன்றத் தலைவன்.

தந்தை பெரியார் சொன்னதுபோல் இது பீயில் அரிசி பொறுக்கும் வேலை.

சரி, ஒரு வாதத்துக்கு இவர்களிடம் மேலோங்கும் நடிப்பு ரசனையை அங்கீகரித்து ஒரு கேள்வி கேட்கலாம்.

முண்டாசு கட்டாத பாரதி…

உடைவாளும், உறுமலும் இல்லாத ஒரு கட்டபொம்மன்…

கோட்டும், சூட்டும், சவடாலும் தொலைத்த ஜார்ஜ் புஷ்…

படுக்கையறையிலோ, கக்கூசுக்குள்ளோ… அனேகமாக அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள்.

ஒரேயொரு காட்சியில் அடையாளப்படுத்திவிட முடியுமா அவர்களை… எந்த ஒப்பனையாளரின் துணையுமின்றி?

நடிகர் திலகத்துக்கே நிச்சயம் நாக்கு தள்ளி போகும்.

கலைஞானி என்ன…

வெங்காயம்!