காங்கிரஸ் போனால் பா.ச.க. வந்து விடும் என்று மார்க்சிஸ்டுகள் சொல்கிறார்களே…
சாட்டை
இந்தப் பூச்சாண்டிக்குப் பதில் மார்க்சிஸ்டுகள் பின்லேடனைக் காட்டி புஷ்சை ஆதரிக்க வைக்கலாம். அந்தக் கேப்மாறித் தனத்திற்கு இந்த மொள்ளமாறித்தனம் எவ்வளவோ மேல்.
ஜூலை 22, 2008
ஜூலை 17, 2008
‘கவியரசு’ கண்ணதாசனை பின்னுக்குத் தள்ள, ‘கவிப்பேரரசு’ பட்டம் போட்டுக் கொண்ட வைரமுத்துவின் அரிப்புக்கு ஈடான அரிப்பு இது.
“அந்த மேதை எங்கே; நான் எங்கே?” என்று வெளியில் கைகட்டி பவ்யம். உள்ளுக்குள்ளோ அதைத் தாண்டிக் குதிக்க சந்தர்ப்பம் தேடி அலைச்சல்.
அரிப்பு இருக்கும் அளவுக்கு கொஞ்சம் சரக்கும் இருந்திருந்தால் கமலின் மானம் இப்படிக் கப்பலேறியிருக்காது.
கிளைமாக்சில் சுனாமி வந்ததற்கு உண்மையான காரணம் என்ன?

“பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க!”
- இது அசின் போன்ற அரை லூசு ஆத்திகக் கும்பலுக்கு.
“கிருமியைக் கொல்ல.”
- இது பாராட்டி விழா எடுக்கக் காத்திருக்கும் கி. வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுக் கோஷ்டிக்கு.
உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது.
உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே!
மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே!
பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலை ஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!
அது சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு சிலையை கரையில் சேர்த்து என்ன பிரயோஜனம்?
பழையபடி சிதம்பரம் கோயிலுக்குள் அதைக் கொண்டு வைப்பது யாராம்?
சிதம்பரம் தீட்சிதர்களைக் கேட்டு சீக்கிரம் அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டாமோ! அவசரப்பட்டு அடுத்த சுனாமியை பெருமாள் சாமி அனுப்பிச்சிடப் போறார்.
“கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்” என்ற வசனம் கடவுள் இல்லை என்பதைத்தானே சொல்கிறது?
“நீ ஆம்பளைதானே?” என்ற கேள்விக்கு “அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என பதில் சொல்லும் ஜென்மம் எது?
கண்டிப்பாக ஆணுமில்லை, பெண்ணுமில்லை;
இடைப்பட்ட ஏதோவொண்ணு.
“இருக்கிறாரா, இல்லையா?” என்ற கேள்விக்கு ‘இருக்கு’, ‘இல்லை’ என்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே.
“கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?” எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால்… சந்தேகமே வேணாம்… கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம்.
புகழாரம் இன்னும் கொஞ்சம் நீண்டு “வசனங்களை எழுதியவர் கமலா? பெரியாரா?” என பட்டிமன்றம் நடத்தாத வரைக்கும் நாம் தப்பித்தோம்.
கண்டங்கள் பல தாண்டி, பல தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்த கோவிந்த ராமசாமி ஒரு பெண்ணிடமிருந்து தம்மாத்துண்டு டப்பியை பிடுங்க இத்தனை பாடா?
அந்தப் பெண் ஒரு அக்ரகாரத்து மாமி என்பதைக் கணக்கில் கொண்டால் கலைஞானியின் ‘நூல்’ அரசியல் புலப்படும்.
தில்லை வாழ் அந்தணர்களிலிருந்து தில்லி ‘எய்ம்ஸ்’ வாழ் அந்தணர்கள் வரை அதைத்தான் சொல்கிறார்கள்.
ஜூலை 9, 2008
வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்:
கமலஹாசனுக்கு உலக நாயகன் பட்டம்!
ஜூன் 12.
‘தசாவதாரம்’ ரிலீசுக்கு ஒரு நாள் முன்தினம்.
வழக்கொன்று வந்தது உச்ச நீதிமன்றத்தில்.
வழக்கம்போல் தள்ளி வைக்கவில்லை.
காரணம், வழக்காடியவர்கள் புறப்பட்ட இடம் அப்படி.
விடுமுறையென்றாலும் வீட்டிலிருந்தேனும் விசாரித்தாக வேண்டும்!
விசாரித்தார்கள்.
“முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு போடுங்கள் வழக்கை” என்றார்கள்.
‘நாங்கள் இருக்கிறோம்’ என்று ரகசிய ஜாடை காட்டி, தைரியமூட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
படம் வந்து வாரம் நான்காகி விட்டது.
வழக்கையும் காணோம், ஒரு புண்ணாக்கையும் காணோம்.
என்ன ஆச்சு?
12 ஆம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையைச் சொல்லி இந்துக்களின் மானத்தைக் கூண்டிலேற்றுகிறார் கமல் என்ற குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என அறிந்து, வருந்தி ஜகா வாங்கி விட்டார்களா?
‘இருக்கலாம்’ என்பவர்கள் அப்பாவிகள்.
சுஜாதா செத்துப்பூட்டாரு, பாலச்சந்தருக்கு வயசாயிடுச்சு, மணிரத்னத்துக்கோ முடியல. கொஞ்சம் வெவரஞ் தெரிஞ்சவாளா இருக்குற இவரையும் பகைச்சுக்கிட்டா கோடம்பாக்கத்துல நமக்கு ஆளில்லாமப் போயிடுமேங்கிற கரிசனையால அடக்கி வாசிக்கிறார்களோ….?
அப்படியும் இருக்கலாமென்பவர்கள் உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
இப்படி யோசித்துப் பார்க்கலாம்.
ஓடாத படத்தைத் தடை செய்து ஓடவைக்க சில தயாரிப்பாளர்களே பினாமிகளின் பெயரில் கோர்ட்டுக்குப் போவார்கள்.
ஆஸ்கார் ரவிச்சந்திர அய்யரின் பினாமியாக இராம. கோபாலய்யர் ஏனிருக்கக்கூடாது?
போஸ்டரில் அவர் பெயர் இல்லாவிட்டாலென்ன? ‘சைலன்ட் பார்ட்னராக’ இருக்கலாமில்லையா?
வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை எனும் அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கிறது.
இந்த அறிவிப்பு மட்டும் போதுமா?
வரலாறு எங்கே முடிகிறது, கற்பனை எங்கே தொடங்குகிறது என்று சொல்ல வேண்டாமா?
இரண்டாம் குலோத்துங்கன், ரங்கராஜன் நம்பி சைவ - வைணவ யுத்தம், ‘ஓம் நமோ நாராயண நமஹ…’ இவையெல்லாம்தான் வரலாறு என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருக்க, மல்லிகா ஷெராவத், பிளெட்சர், கிளப் டான்ஸ் சமாச்சாரங்கள்தான் வரலாறு, மற்றதெல்லாம் கப்ஸா என்று மற்றவர்கள் எண்ணி குழம்பிவிடக்கூடாது அல்லவா!
ஒரு படைப்பாளனின் நேர்மை அவன் சொன்ன செய்தியில் மட்டுமல்ல, சொல்லாமல் விட்ட சங்கதிகளிலும் இருக்கிறது.
பம்பாயில் இந்து - முஸ்லீம் கலவரத்தைச் சொன்ன படைப்பாளி மணிரத்னம், கலவரத்துக்குக் காரணமான பாபர் மசூதி இடிப்பைத் திட்டமிட்டே மறைத்ததுபோல்…
‘ஜென்டில்மேன்’ முதல் ‘சிவாஜி’ வரை கல்வி வியாபாரமாகி விட்டது என புலம்பும் ஷங்கர் கூட்டணி, அது தனியார் மய - தாராளமய தாசர்களால் நேர்ந்தது என்பதைச் சொல்ல மறுப்பது போல்…
கிரிமி யுத்தத்தின் பூர்வ ஜென்மத் தொடர்பை ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகியில் தேடுவதற்குப் பதில் கையில் கிடைத்த புராணக் குப்பைகளில் அலசியிருக்கிறார் கமல்.
கடலில் தூக்கிப் போடப்பட்ட பெருமாள் சிலையை மீண்டும் கரைக்குக் கொண்டு வரவே சுனாமி வந்ததாம்.
அதாவது இயற்கைச் சீற்றம் ஒரு புராணத்துடன் முடிச்சுப் போடப்படுகிறது.
ஜெயேந்திரனைக் கைது செய்ததால்தான் சுனாமி வந்தது என சங்கர மடத் துதிபாடிகள் அப்போது சொன்னதை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முன்னதற்கு வயிற்றெரிச்சல் காரணம். பின்னவருக்கு?
பார்ப்பனிய விஷமத்தனம் காரணம்.
ஆன்மீக முட்டாள் ரஜினியை விட, அரைகுறை அறிவாளி கமல் உண்மையில் ரொம்ப
ஆபத்தானவர்.
தசாவதாரத்தைக் கிழிகிழியெனக் கிழிக்கும் விமர்சகர்களில் சிலரும் கொண்டாடும் புரட்சிப் படம் ஹேராம்.
ஹேராமின் நாயகன் யார்?
காந்தியைக் கொன்றவன்.
கொல்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் - அதன் வழி இந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த முசுலீம்களையும் கருவறுக்க வசதியாக தன்னுடைய பெயரை ஒரு முசுலீம் பெயராக்கிக் கொண்ட ஒரு ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்.
அவன் பெயர் கோட்சே.
அந்தக் கோட்சேவைத்தான் நாயகனாக்கினார் கமலஹாசன்.
அதுசரி, ஒரு கிரிமினலை கதாபாத்திரமாக்கும் உரிமை ஒரு படைப்பாளிக்கில்லையா?
இருக்கிறது.
ஆனால், இது வெறும் படைப்பாளியின் உரிமை பற்றிய விசயமில்லை. அந்தக் கதையை எந்தப் பாத்திரத்தின் வழியாக அந்தப் படைப்பாளி சொல்கிறார் என்பதே கேள்வி.
வேலு நாயக்கர் என்ற ரௌடியாக,
பொம்பளைப் பொறுக்கியாக,
மோசமான மனநோயாளியாக வந்தபோதெல்லாம் அவரின் வக்கிரங்களைக் கண்டு ரசிகர்கள் கண்களைப் பொத்திக் கொள்ளவில்லை.
மாறாக கைதட்டி ரசித்தார்கள். பாத்திரத்தில் தன்மையோடு ஒன்றிப் போனார்கள்.
‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் உள்ள நடிகன் ஏற்கும் எந்தப் பாத்திரமும் ரசிகரிடம் அப்படித்தான் போய்ச் சேரும்.
கோட்சேவும் அப்படித்தான் போய் சேர்ந்திருக்கக்கூடும்.
ஒருவகையில் கோட்சே தரப்பு ‘நியாயங்களை’ ஹேராம் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார் கமல்.
சிவசேனாவும், வி.எச்.பி.யும் அரசியல் தளத்தில் செய்யும் பணியை கலைத்துறையில் செய்திருக்கிறார் இந்தக் கலைஞானி.
செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்திருக்கிறோமா என்று சரிபார்க்க ‘பம்பாய்’ படத்தின்போது பால்தாக்கரேவின் காலில் விழுந்தார் மருமகன் மணிரத்னம்.
புஷ்ஷின் அங்கீகாரத்திற்காக அலைந்து திரிந்தார் மாமா கமலஹாசன்.
நல்ல கலைக்குடும்பம்.
அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ற ஹிட்லரின் நாஜிக் கொடூரத்தைப் பதிவு செய்யும் ஒரு எழுத்தாளன் அடுத்த வரியில் ‘குழந்தைகளென்றால் ஹிட்லருக்குக் கொள்ளைப் பிரியம்’ என்று ஒரு பாராட்டையும் சேர்த்து எழுத முடியுமா?
படம் சொல்லும் அரசியலை ஒரு ஓரம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு நடிகனாக கமலின் பன்முக ஆற்றலைப் பார்க்க நம் கழுத்தைப் பிடித்து திருப்புகிறார்களே….! அவர்கள் முடியுமென்று சொல்கிறார்கள்.
‘கடைந்தெடுத்த கிரிமினல்’ என்று உலகமே காறி உமிழ்கிறது ஜார்ஜ் புஷ் முகத்தில்.
‘உலக நாயகனே வா… வா…’ என்று கும்மியடித்துக் குலவையிடுகிறார் கமலஹாசன்.
ஒரு மோசமான அரசியலை முன்னெடுக்கும் படைப்பில் நல்ல விசயங்களைத் தேடி பூதக் கண்ணாடியோடு கிளம்புபவன் நல்ல விமர்சகன் அல்ல. அந்த ஆளோட ரசிகர் மன்றத் தலைவன்.
தந்தை பெரியார் சொன்னதுபோல் இது பீயில் அரிசி பொறுக்கும் வேலை.
சரி, ஒரு வாதத்துக்கு இவர்களிடம் மேலோங்கும் நடிப்பு ரசனையை அங்கீகரித்து ஒரு கேள்வி கேட்கலாம்.
முண்டாசு கட்டாத பாரதி…
உடைவாளும், உறுமலும் இல்லாத ஒரு கட்டபொம்மன்…
கோட்டும், சூட்டும், சவடாலும் தொலைத்த ஜார்ஜ் புஷ்…
படுக்கையறையிலோ, கக்கூசுக்குள்ளோ… அனேகமாக அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள்.
ஒரேயொரு காட்சியில் அடையாளப்படுத்திவிட முடியுமா அவர்களை… எந்த ஒப்பனையாளரின் துணையுமின்றி?
நடிகர் திலகத்துக்கே நிச்சயம் நாக்கு தள்ளி போகும்.
கலைஞானி என்ன…
வெங்காயம்!
ஜூலை 2, 2008
தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக மக்கள் சில சங்கடங்களைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறாரே ப. சிதம்பரம்…
சாட்டை
காங்கிரஸ்காரனாக இருந்து கொண்டே அக்கட்சியைக் கல்லறைக்கு அனுப்பும் தனது சதித்திட்டத்தை பச்சையாக எப்படிச் சொல்வார்? அதுதான் ‘தேசநலன்’ அது, இது என்று சுற்றி வளைத்து பூடகமாகச் சொல்கிறார் ப.சி.
“காங்கிரசை ஒழித்துக் கட்டுவதுதான் என்னுடைய முதல் வேலை” எனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். தன் காலத்தில் தமிழ் நாட்டுக்குள் அதைச் சாதிக்கவும் செய்தார்.
தொடர்ந்து அகில இந்திய அளவில் ஒழிப்பு வேலை செய்து அதை பாடையில் தூக்கி வைக்க வேண்டிய வீரமணி, கலைஞர் வகையறாக்கள் அக்கட்சியைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்றார்கள்.
இந்தக் கொடுமையை காணச் சகியா சிதம்பரம் பெரியார் பணி முடிப்பது ஒரு தமிழன் என்ற முறையில் தன் தோள்மேல் விழுந்த கடமையென கிளம்பியிருக்கிறார்.
பெரியார் தொண்டராக இல்லாவிட்டால் என்ன? கதர் சட்டை அணிந்த ஒரு கறுப்புச் சட்டையாக அவரைக் கொண்டாட வேண்டியது நமது கடமை.
சொத்தை அடமானம் வைத்தால்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும் என்ற நிலைக்கு நம்மை கொண்டு போனாலும் அவர் நம்மாளுதான்… நாம அவர் பக்கம்தான்.
தேச நலனுக்காக இந்தச் சங்கடத்தை தாங்கிக் கொள்வோம்.
ஜூன் 30, 2008
உத்தப்புரத்தின் தீண்டாமைச் சுவர் இடித்து நொறுக்கப்பட்டு விட்டதே….
சாட்டை
நம்பவே முடியலீங்க.
“சாதியைக் கட்டிக்காத்த ஒரு சுவர் நாம் வாழும் காலத்தில், அதுவும் நம் கண் முன்பே இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட காட்சியையா?”
சேச்சே…
“ஆதிக்கச் சாதியினரின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து போகாமல் கடைசி வரை கலைஞர் ‘உறுதியாய்’ நின்றதைச் சொல்கிறீர்களா?”
அதுவும் இல்லையப்பா…
“அப்படியானால் வேறு என்ன?”
“திருவரங்கம் கருவறையிலும், சிதம்பரம் நடராசன் சன்னதியிலும் பார்வையாளர்களாக நின்று தீட்சிதர்களோடு ‘சமூக நல்லிணக்கம்’ காத்த சி.பி.எம்., உத்தப்புரத்தில் திடீர் பிள்ளையார்போல் திடீர் சாதி எதிர்ப்புப் போராளியாக அவதாரமெடுத்த அதிசயத்தை சத்தியமாக நம்பவே முடியவில்லை.”
ஜூன் 27, 2008
ஜூன் 25, 2008
கருணாநிதியின் ராமர் விமர்சனத்தினால்தான் குஜராத், கர்நாடக மாநிலங்களில் பா.ச.க. வெற்றி பெற்றது என்று அய்யா நெடுமாறன் கூறுகிறாரே….
சாட்டை
அய்யா கொஞ்சம் வெவரமானவருங்கோ!
வழக்கமாக வாக்குப் பதிவுக்கு முன் பலரும் கருத்துக் கணிப்பு நடத்துவாங்க. முடிந்தவுடன் சிலர் கணிப்பு நடத்துவார்கள்.
அய்யா அவர்களோ தேர்தல் நடந்து, பதவியேற்பும் முடிந்தபின் கணிப்பை நடத்தியிருக்கிறார்.
என்னவொரு வசதி பாருங்க!
‘சொன்னது என்ன? நடந்தது என்ன?’ என்று யாரும் அவரைக் கேள்வி கேட்க முடியாது. தன் சொந்த ஆசைகளை மக்களின் விருப்பமாக வேறு சொல்லி வைக்கலாம்.
“அய்யய்யோ… பழையபடி பி.ஜே.பி. வந்துடும்போல் இருக்கே…” என்றபடி கவலை ரேகைகளை முகத்தில் தேக்கலாம். உள்ளுக்குள்ளோ அதன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கலாம்.
ஆனா ஒண்ணு, கணிப்பு அண்ட் காமெடி கோஷ்டிகளான சுப்ரமணியம் சாமி, ‘லயோலா’ பாதிரி ராஜநாயகம் மாதிரி ஆளுங்க பொழப்புல கொஞ்சம் மண் விழும்.
தொழில் போட்டியில அவுங்களோட தகராறு வரலாம். அய்யா, கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.
ஜூன் 23, 2008
இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதில் தப்பில்லை என்று விஜயகாந்த் சொல்கிறாரே…?
சாட்டை

‘உளறி விட்டார்’ என்று சொல்ல வழியில்லை.
- பேசியிருப்பது பகல் நேரத்தில் என்பதால்.
ஒருவேளை புலிகளுக்கு ஆதரவாகக்கூட கேப்டன் இப்படிச் சொல்லியிருக்கக்கூடும்.
கார்கில் போரில் கைலாயம் போன இராணுவத்துக்குச் சவப்பெட்டி வாங்குனதுக்கே கமிஷன் அடிச்ச பெருச்சாளிங்க நம்மாளுங்க…!
ஆயுத பேரத்துல கை சும்மாவா இருந்திருக்கும்?
அதை எடுத்துக்கிட்டு சண்டைக்குப் போறதைவிட சிவகாசியிலிருந்து லெட்சுமி வெடி, தௌசன்ட் வாலா வாங்கி, வன்னிக் காட்டுக்குப் போவதே புத்திசாலித்தனம். பாதுகாப்பும் கூட.
இப்போது புரிகிறதா?
சிங்களனை உதை வாங்க வைக்கவே ஆயுதம் கொடுக்கச் சொல்கிறார் நம்ம கேப்டன். இந்தப் போர் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் ‘குடிகாரன்’, ‘உளறுவாயன்’ என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசக்கூடாது.
ஜூன் 21, 2008
ரஜினியைப் பத்தி சி.பி. எஸ்.ஸி.யில் பாடம் நடத்துகிறார்களாமே ….?
சாட்டை!
எப்போதோ சொல்லிக் கொடுக்க வேண்டியது.
இப்போதாவது புத்தி வந்ததே என்று சந்தோஷப்படுங்கள்!
முரண்பாடு என்ன தெரியுமா?
பில்கேட்சை இளைய தலைமுறையின் கனவு நாயகனாகக் கட்டமைக்கிறவர்கள், ரஜினி விசயத்தில் முகம் சுழிக்கும் கொடுமை.
ஊரை அடித்து உலையில் போடுவது எப்படி? என கற்றுக் கொடுப்பதுதான் இப்போதையக் கல்வி முறை. அப்படிப்பட்ட கல்விக்கு ரஜினி மட்டுமல்ல; அர்சத் மேத்தா, அம்பானி தொடங்கி
நம்ம ஊரு ஆட்டோ சங்கர் வரை பாடம் நடத்துவதுதான் முறையானது.
நமக்கு வேறொரு சந்தேகம்:
சில மாதங்களுக்கு முன் சென்னையில் பஸ் டிக்கெட்டை சொந்தமாகவே அச்சடித்துக் கொண்டு பயணிகளிடம் வசூல் செய்தார் ஒரு மோசடி கண்டக்டர்.
அவர் இப்போது புழல் சிறையில்…
கொடுத்த டிக்கெட்டையே திரும்பவும் வாங்கி அடுத்தப் பயணிக்குக் கொடுத்து காசு பார்த்து மாட்டிக் கொண்ட பெங்களூரு கண்டக்டரோ சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில்…
ஏன் இந்தப் பாரபட்சம்?
ஜனவரி 2, 2008

ரொம்ப நாளைக்கப்புறம் அவனைப் பார்த்தேன்.
‘ஜனநாயகத் தூண்களை அசைத்துப் பார்க்காதே…
‘பத்திரிகைச் சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைக்க முற்படும் மு.க. அழகிரியை அரசே உடனே கைது செ
ஒருவர் மைக்கில் ஓங்கிக் குரல் கொடுக்க நம்மாளு பதிலுக்கு ‘கைது செய் என்று முஷ்டியை மடக்கி, பின்பு உயர்த்தி கத்திக் கொண்டிருந்தான்.
மைக்கைப் பிடித்திருந்தவர் கலாநிதி மாறனும் இல்லை; இவன் ‘தினகரன் ஊழியனுமில்லை.
வேற யாரு?
யாரு, நம்ம சி.பி.எம்.முங்கதான்.
‘ரெண்டுல ஒண்ணு பாக்காம விடப் போறதில்லை என முண்டா தட்டுன மொதலாளியோ, அழகிரிக்கு எதிராக ஆதரவு திரட்ட ஜெர்மனிக்குப் போயிட்டாரு.
குட்டி மொதலாளி ஊட்டியில.
‘பத்திரிகை வந்தா அடியாளுங்க அடிக்கிறானுங்க; வரலேன்னா மொதலாளி வயித்துல அடிப்பான்
கடமையுணர்ச்சியோட தினகரன் ஊழியருங்க பத்திரிகை காம்பவுண்டுக்குள்ள…
கோர்ப்பச்சேவுக்கு காய்ச்சல் வந்தா இங்கே போத்திப் படுத்துக் கொள்பவர்கள் உள்ளூரில், அதுவும் தன் கண் எதிரில் நடக்கும் அநீதி கண்டு சும்மா இருக்க முடியுமா?
நம்மாளு இருக்கானே… கைதட்டிக் கூப்பிட்டாலே வந்து விடுவான்தான். பாவம், அவ்வளவு கஷ்டப்பட்டுச் சேத்தக் கூட்டத்துல பாதி காணாமப் போன மாதிரியாயிடுமேன்னு கொஞ்ச நேரம் அமைதியா இருந்தேன்
.மைக்கை பைக்குள் போட்டு, கொடியைச் சுருட்டி அக்குளில் இடுக்கியபடி ‘போராளிகள்‘ புறப்படத் தயாரானபோது பின்னால் போய் அவன் தோளைத் தட்டினேன்.
அடியாட்கள்தான் பழையபடி வந்துவிட்டார்களோ என திடுக்கிட்டபடி ஓரடி முன்னால் நகர்ந்தவன் எப்படியோ கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான்.
குலுக்கிய உண்டியலில் ஐநூறு ரூபா விழுந்ததை கண்டவன்போல என்னைப் பார்த்ததும் ஒரு சிரிப்பு.
டீயெல்லாம் குடித்து ஆசுவாசப்படுத்திய பின்னும் அழகிரிக்கு எதிரான ஆவேசம் கொஞ்சம் கூட தணியாமல் இருந்தான் நம்ம காம்ரேடு
.
‘சும்மா சொல்லக்கூடாது. வழக்கமா நீங்க தொழிலாளிகளுக்காக போராடறதை விட மொதலாளிமாருங்களுக்காக நீங்க களம் இறங்குறப்போ காட்டுற உணர்ச்சியும், வேகமும் கொஞ்சம் கூடுதல்தானப்பா.”
காம்ரேடின் தோள் தட்டி பாராட்டினேன்
.‘ இதப் பாரு… நாங்க எத செஞ்சாலும் நொள்ள சொல்றதே உனக்கு வேலையா போச்சு. இப்ப நாங்க போராடினது மொதலாளிக்கில்ல. அநியாயமா உசுர விட்ட மூணு தொழிலாளிகளுக்குத்தான்.”
‘சிக்கல்னு வந்தா தொழிலாளிகளை முன்னால கொண்டு நிறுத்தறுதுதான் இந்த முதலாளிகளோட தந்திரம்னு நேத்தி வரைக்கும் பேசி பொளந்து கட்டுனவங்களாச்சேப்பா நீங்க. இப்ப எப்படி இத முதலாளியோட பிரச்சனை இல்ல என்கிறீங்க?
இதே தினகரன்ல கடந்த ஒரு வருசத்துல மட்டும் நூத்துக் கணக்கானவங்கள எந்த முன்னறிவிப்பும் இல்லாம ‘நாளையிலேருந்து வேலைக்கு வர வேணாமுன்னு தொரத்தி தெருவுக்கு விட்டானுங்க. அப்ப எங்கப் போச்சு உங்க வர்க்கப் பாசம்?
கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமைதி காத்தீங்களா?”
‘இது விதண்டாவாதம். பச்சையா அராஜகத்துக்கு துணை போறது. இந்தாளுக்கும், அந்தாளுக்கும் பிரச்சனையின்னா அத அவுங்க குடும்பத்துக்குள்ளதானே பேசித் தீத்துக்கணும். அது விட்டுப்புட்டு சும்மா சம்பளத்துக்கு வேலை பாத்தவனுங்களை கொல்றதை நியாயப்படுத்துறியா?”
‘கண்டிப்பா நியாயப்படுத்த முடியாதுதான். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், முதலமைச்சரின் வீட்டிலிருந்தாலும் கடுமையான தண்டனைக்கு உட்பட வேண்டியவர்கள்தான்.
ஆனா, பங்காளிங்க சண்டையில எப்பவுமே பஞ்சாயத்துப் பண்ணப் போறவன் மாட்டி ஒதபடுவது வழக்கம்தானே.
அந்தக் கதைதான் இங்கேயும் நடந்து போச்சு.
சரி, அந்தாளுக்கும், இந்தாளுக்கும் பிரச்சனையின்னு சொன்னியே…எந்த ஆளுக்கும் எந்த ஆளுக்கும், என்ன பிரச்சனை?‘
எதுவுமே தெரியாத மாதிரி என் வாயைக் கிளர்ற? கருணாநிதியோட அரசியல்<