திரைப்பட விமர்சனம்


வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்:

கமலஹாசனுக்கு உலக நாயகன் பட்டம்!

 

 

ஜூன் 12.

‘தசாவதாரம்’ ரிலீசுக்கு ஒரு நாள் முன்தினம்.

வழக்கொன்று வந்தது உச்ச நீதிமன்றத்தில்.

வழக்கம்போல் தள்ளி வைக்கவில்லை.

காரணம், வழக்காடியவர்கள் புறப்பட்ட இடம் அப்படி.

விடுமுறையென்றாலும் வீட்டிலிருந்தேனும் விசாரித்தாக வேண்டும்!

விசாரித்தார்கள்.

“முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு போடுங்கள் வழக்கை” என்றார்கள்.

‘நாங்கள் இருக்கிறோம்’ என்று ரகசிய ஜாடை காட்டி, தைரியமூட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.

படம் வந்து வாரம் நான்காகி விட்டது.

வழக்கையும் காணோம், ஒரு புண்ணாக்கையும் காணோம்.

என்ன ஆச்சு?

 

 

12 ஆம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையைச் சொல்லி இந்துக்களின் மானத்தைக் கூண்டிலேற்றுகிறார் கமல் என்ற குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என அறிந்து, வருந்தி ஜகா வாங்கி விட்டார்களா?

‘இருக்கலாம்’ என்பவர்கள் அப்பாவிகள்.

சுஜாதா செத்துப்பூட்டாரு, பாலச்சந்தருக்கு வயசாயிடுச்சு, மணிரத்னத்துக்கோ முடியல. கொஞ்சம் வெவரஞ் தெரிஞ்சவாளா இருக்குற இவரையும் பகைச்சுக்கிட்டா கோடம்பாக்கத்துல நமக்கு ஆளில்லாமப் போயிடுமேங்கிற கரிசனையால அடக்கி வாசிக்கிறார்களோ….?

அப்படியும் இருக்கலாமென்பவர்கள் உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
இப்படி யோசித்துப் பார்க்கலாம்.

ஓடாத படத்தைத் தடை செய்து ஓடவைக்க சில தயாரிப்பாளர்களே பினாமிகளின் பெயரில் கோர்ட்டுக்குப் போவார்கள்.

ஆஸ்கார் ரவிச்சந்திர அய்யரின் பினாமியாக இராம. கோபாலய்யர் ஏனிருக்கக்கூடாது?

போஸ்டரில் அவர் பெயர் இல்லாவிட்டாலென்ன? ‘சைலன்ட் பார்ட்னராக’ இருக்கலாமில்லையா?

வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை எனும் அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கிறது.

இந்த அறிவிப்பு மட்டும் போதுமா?

வரலாறு எங்கே முடிகிறது, கற்பனை எங்கே தொடங்குகிறது என்று சொல்ல வேண்டாமா?

இரண்டாம் குலோத்துங்கன், ரங்கராஜன் நம்பி சைவ – வைணவ யுத்தம், ‘ஓம் நமோ நாராயண நமஹ…’ இவையெல்லாம்தான் வரலாறு என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருக்க, மல்லிகா ஷெராவத், பிளெட்சர், கிளப் டான்ஸ் சமாச்சாரங்கள்தான் வரலாறு, மற்றதெல்லாம் கப்ஸா என்று மற்றவர்கள் எண்ணி குழம்பிவிடக்கூடாது அல்லவா!

ஒரு படைப்பாளனின் நேர்மை அவன் சொன்ன செய்தியில் மட்டுமல்ல, சொல்லாமல் விட்ட சங்கதிகளிலும் இருக்கிறது.

பம்பாயில் இந்து – முஸ்லீம் கலவரத்தைச் சொன்ன படைப்பாளி மணிரத்னம், கலவரத்துக்குக் காரணமான பாபர் மசூதி இடிப்பைத் திட்டமிட்டே மறைத்ததுபோல்…

‘ஜென்டில்மேன்’ முதல் ‘சிவாஜி’ வரை கல்வி வியாபாரமாகி விட்டது என புலம்பும் ஷங்கர் கூட்டணி, அது தனியார் மய – தாராளமய தாசர்களால் நேர்ந்தது என்பதைச் சொல்ல மறுப்பது போல்…

கிரிமி யுத்தத்தின் பூர்வ ஜென்மத் தொடர்பை ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகியில் தேடுவதற்குப் பதில் கையில் கிடைத்த புராணக் குப்பைகளில் அலசியிருக்கிறார் கமல்.

கடலில் தூக்கிப் போடப்பட்ட பெருமாள் சிலையை மீண்டும் கரைக்குக் கொண்டு வரவே சுனாமி வந்ததாம்.

அதாவது இயற்கைச் சீற்றம் ஒரு புராணத்துடன் முடிச்சுப் போடப்படுகிறது.

ஜெயேந்திரனைக் கைது செய்ததால்தான் சுனாமி வந்தது என சங்கர மடத் துதிபாடிகள் அப்போது சொன்னதை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னதற்கு வயிற்றெரிச்சல் காரணம். பின்னவருக்கு?

பார்ப்பனிய விஷமத்தனம் காரணம்.

ஆன்மீக முட்டாள் ரஜினியை விட, அரைகுறை அறிவாளி கமல் உண்மையில் ரொம்ப

ஆபத்தானவர்.

தசாவதாரத்தைக் கிழிகிழியெனக் கிழிக்கும் விமர்சகர்களில் சிலரும் கொண்டாடும் புரட்சிப் படம் ஹேராம்.

ஹேராமின் நாயகன் யார்?

காந்தியைக் கொன்றவன்.

கொல்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் – அதன் வழி இந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த முசுலீம்களையும் கருவறுக்க வசதியாக தன்னுடைய பெயரை ஒரு முசுலீம் பெயராக்கிக் கொண்ட ஒரு ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்.

அவன் பெயர் கோட்சே.

அந்தக் கோட்சேவைத்தான் நாயகனாக்கினார் கமலஹாசன்.

அதுசரி, ஒரு கிரிமினலை கதாபாத்திரமாக்கும் உரிமை ஒரு படைப்பாளிக்கில்லையா?

இருக்கிறது.

ஆனால், இது வெறும் படைப்பாளியின் உரிமை பற்றிய விசயமில்லை. அந்தக் கதையை எந்தப் பாத்திரத்தின் வழியாக  அந்தப் படைப்பாளி சொல்கிறார் என்பதே கேள்வி.

வேலு நாயக்கர் என்ற ரௌடியாக,

பொம்பளைப் பொறுக்கியாக,

மோசமான மனநோயாளியாக வந்தபோதெல்லாம் அவரின் வக்கிரங்களைக் கண்டு ரசிகர்கள் கண்களைப் பொத்திக் கொள்ளவில்லை.

மாறாக கைதட்டி ரசித்தார்கள். பாத்திரத்தில் தன்மையோடு ஒன்றிப் போனார்கள்.

‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் உள்ள நடிகன் ஏற்கும் எந்தப் பாத்திரமும் ரசிகரிடம் அப்படித்தான் போய்ச் சேரும்.

கோட்சேவும் அப்படித்தான் போய் சேர்ந்திருக்கக்கூடும்.

ஒருவகையில் கோட்சே தரப்பு ‘நியாயங்களை’ ஹேராம் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார் கமல்.

சிவசேனாவும், வி.எச்.பி.யும் அரசியல் தளத்தில் செய்யும் பணியை கலைத்துறையில் செய்திருக்கிறார் இந்தக் கலைஞானி.

செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்திருக்கிறோமா என்று சரிபார்க்க ‘பம்பாய்’ படத்தின்போது பால்தாக்கரேவின் காலில் விழுந்தார் மருமகன் மணிரத்னம்.

புஷ்ஷின் அங்கீகாரத்திற்காக அலைந்து திரிந்தார் மாமா கமலஹாசன்.

நல்ல கலைக்குடும்பம்.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ற ஹிட்லரின் நாஜிக் கொடூரத்தைப் பதிவு செய்யும் ஒரு எழுத்தாளன் அடுத்த வரியில் ‘குழந்தைகளென்றால் ஹிட்லருக்குக் கொள்ளைப் பிரியம்’ என்று ஒரு பாராட்டையும் சேர்த்து எழுத முடியுமா?

படம் சொல்லும் அரசியலை ஒரு ஓரம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு நடிகனாக கமலின் பன்முக ஆற்றலைப் பார்க்க நம் கழுத்தைப் பிடித்து திருப்புகிறார்களே….! அவர்கள் முடியுமென்று சொல்கிறார்கள்.

‘கடைந்தெடுத்த கிரிமினல்’ என்று உலகமே காறி உமிழ்கிறது ஜார்ஜ் புஷ் முகத்தில்.

‘உலக நாயகனே வா… வா…’ என்று கும்மியடித்துக் குலவையிடுகிறார் கமலஹாசன்.

ஒரு மோசமான அரசியலை முன்னெடுக்கும் படைப்பில் நல்ல விசயங்களைத் தேடி பூதக் கண்ணாடியோடு கிளம்புபவன் நல்ல விமர்சகன் அல்ல. அந்த ஆளோட ரசிகர் மன்றத் தலைவன்.

தந்தை பெரியார் சொன்னதுபோல் இது பீயில் அரிசி பொறுக்கும் வேலை.

சரி, ஒரு வாதத்துக்கு இவர்களிடம் மேலோங்கும் நடிப்பு ரசனையை அங்கீகரித்து ஒரு கேள்வி கேட்கலாம்.

முண்டாசு கட்டாத பாரதி…

உடைவாளும், உறுமலும் இல்லாத ஒரு கட்டபொம்மன்…

கோட்டும், சூட்டும், சவடாலும் தொலைத்த ஜார்ஜ் புஷ்…

படுக்கையறையிலோ, கக்கூசுக்குள்ளோ… அனேகமாக அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள்.

ஒரேயொரு காட்சியில் அடையாளப்படுத்திவிட முடியுமா அவர்களை… எந்த ஒப்பனையாளரின் துணையுமின்றி?

நடிகர் திலகத்துக்கே நிச்சயம் நாக்கு தள்ளி போகும்.

கலைஞானி என்ன…

வெங்காயம்!

 

 

சேரனின் தொலைபேசி கோபம்

cheran.jpg

18.5.2007 அன்று மதியம் 1.30 மணி அளவில் நமது தொலைபேசிக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் சேரன் 19ஏ, சிவசைலம் தெரு, தியாராய நகர் சென்னையில் உள்ள அவரது அலுவலக தொலைபேசியில் இருந்து நம்மை அழைத்தார்.

‘சமூக விழிப்புணர்வு’ மே மாத இதழில் வெளிவந்துள்ள அவரது மாயக்கண்ணாடி திரைப்படம் குறித்த விமர்சனம் குறித்துப் பேச விரும்புவதாக தெரிவித்தார்.

‘சரி பேசுங்கள்’. என்றேன்.

‘நான் பார்ப்பனர் கிடையாது’ என்றார் சேரன்.

‘மிக நன்றாகத் தெரியும்’ என்றேன்.

‘நான் குலத் தொழிலுக்கு ஆதரவானவன் கிடையாது. அந்தக் கருத்தினை வலியுறுத்தி நான் படம் எடுக்கவில்லை’ என்றார்.

நான் மௌனமாக இருந்தேன்.

நான் கஷ்டப்பட்டு, அடிபட்டு, மிதிபட்டு மிகுந்த சிரமத்திற்கிடையே இயக்குனராக இன்று உயர்ந்துள்ளேன். நீங்கள் விமர்சனத்தில் கூறியுள்ள வழியில் உயர்ந்த நிலைக்கு வரவில்லை என்றார். நல்ல செய்தியை நம்மால் முடிந்த நான்கு பேருக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த துறைக்கு வந்துள்ளேன். சில இயக்குனர்களைப் போல பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணம் கிடையாது என்ற சேரன் தொடர்ந்து கோபமாகப் பேசினார்.

‘சமூக விழிப்புணர்வு’ போன்ற இதழில் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனம் வந்துள்ளதால்தான் நான் பேச வேண்டி இருக்கிறது’ என்றார். ‘இந்தப் படத்தில் கூறப்படும் கதையை நான் ஒரு கோணத்தில் கூறியுள்ளேன். ஆனால் நீங்கள் வேறொரு கோணத்தில் நான் குலக்கல்விக்கு ஆதரவானவன் என்பதாக தவறாக விமர்சித்துள்ளீர்கள்’ என்றார்.

‘நமது சேரன் இப்படி எடுத்துட்டாரே? என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.

சேரனின் கோபம் பல மடங்கு அதிகரித்தது. ‘தயவு செய்து அவ்வாறு கூறாதீர்கள். இது அப்படி எழுதப்பட்ட விமர்சனமாகத் தெரியவில்லை.

‘நான் பெரிய மயிரு பிடுங்கின்னு நெனக்கிறவனும் இல்ல. மயிரு பிடுங்கறத கேவலமா நினைக்கிறவனும் இல்ல’ என்று கோபத்துடன் கூறினார். நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். எனது திரைப்படம் குறித்து விவாதிப்போம். நீங்கள் எவ்வாறு படம் எடுக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு அறிவுரை கூறுங்கள். நான் என்னிடம் தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன். இன்று மாலை 6 மணிக்கு நானே உங்களுக்கு போன் பண்ணுகிறேன். கண்டிப்பாக, இன்று உங்கள் அலுவலகத்தில் சந்திக்க வேண்டும். திரைப்படம் குறித்தும் விமர்சனம் குறித்தும் விவாதிக்க வேண்டும்’ என்று மிகவும் கோபத்துடன் கூறினார்.

நானும் சரி என்று கூறினேன். உரையாடல் இத்துடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தின் மிகச் சிறந்த திரைப்பட இயக்குனர் சேரன் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. சேரனுக்கு திரைப்படம் எடுப்பது குறித்து அறிவுரை கூறும் அளவுக்கு திரைப்பட அறிவு நமக்கு இல்லை. ஆனாலும் சேரனை நாம், மாலையில் சந்திக்கும் பொழுது தேசிய கீதம்’ என்ற அவரது படத்தில் கூறிய ‘புரட்சிகர அரசியல்’ குறித்தும், காந்தி, பெரியார், காமராஜருக்கு அடுத்து ரஜினிதான் மிகச் சிறந்த தலைவர் என்ற அவரது குங்குமம் பேட்டி குறித்து விவாதிக்கவும், அவரிடமிருந்து ‘அரசியல் கற்றுக்’ கொள்ளவும் ஆர்வமாக இருந்தோம்.

ஆனால் ஏனோ சேரன் அதன் பிறகு நம்மை அழைக்கவே இல்லை.

தீஸ்மாஸ் டி செல்வா

 

mk.jpg

  மதுரை மேலூர் பக்கத்துல ஒரு சினிமா ஆபரேட்டர் பையனுக்கு சினிமா ஆசை வந்துடுச்சு. சினிமாவுல சேந்து எப்பிடியும் பெரிய ஆளா, ஒரு பெரிய டைரக்டரா ஆயிடணும்னு துடியா துடிச்சான் அந்தப் பையன்.

ஆனா அதுக்காக அவன் கோடம்பாக்கம் பொறப்பட்டுப் போயி நாயா பேயா அலையல. தன் அப்பா வேலை பாத்த கொட்டாயிலேயே அவருக்கு கீழ எடுபிடியா வேல செஞ்சான். இடவேளை உட்டா முறுக்கு, சுண்டல் வித்து மேலும் தன்னோட திறமையை வளத்துக்கிட்டான்.

அசராத இந்த உழைப்பால சீக்கிரம் அந்தத் தியேட்டருக்கே ஓனர் ஆயிட்டான். அப்புறம் ஏ.வி.எம். மாதிரி ஸ்டுடியோ ஒண்ணு கட்டி, தான் கனவு கண்ட மாதிரி ஒரு டைரக்டரா பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோ கிராப்’… இப்போது கடைசியா மாயக்கண்ணாடின்னு தமிழ்ச் சினிமாவையே கழுத்துச் சுழுக்கிக்கிற அளவுக்குத் திரும்பிப் பார்க்கிற மாதிரி படங்களா எடுத்துக்கிட்டிருக்காம்பா.

அந்த மேதையோட பேரு சேரனுங்களா?”

அட, எப்படி இவ்வளவு கரெக்டா சொன்னீங்க?”

டேய் மடையா… பெத்த புள்ள என்ன படிக்குதுன்னு தெரியாதவன்கூட சினிமாக்காரன் என்னைக்கு பொறந்தான், யாருக்குப் பொறந்தான்கற கதையெல்லாம் நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்கான்.  நீ சொன்னதுல ஊரு, பேரு எல்லாம் ரொம்பச் சரியாத்தான் இருக்குது. ஆனா இந்த குமுதம் கடைசி பக்கத்துல போடுவானே இந்தக் கதைகள்ல வர்ற சம்பவங்களெல்லாம் சுத்தக் கற்பனை, பொய்யின்னு…அந்த மாதிரி இருக்குது சேரனுக்கு நீ சொல்ற வரலாறு.

சரி, வரலாறை உடு சாமி. சினிமா ஆசையில கெட்டுச் சீரழியாம, சொந்தமா அவனவன் தொழிலைப் பாத்தா குடும்பத்துக்காகுமேன்னு ஒரு மனுசன் சொல்றது எப்படி தப்பாவும்?”

தப்பில்லைதான். ஆனா சொல்றவன் அத்தனை பேரும் அவனவன் அப்பன் தொழில்லேந்து தப்பிச்சு ஓடியாந்து, சம்பந்தமில்லாத வேற ஒண்ணுல போய் பூந்துக்கிட்டு இதைச் சொல்றதல்லவா வேடிக்கை யாயிருக்கு.

 செத்த மாட்டைத் தூக்குறவனும், மலம் அள்றவனும், காடு கழனியில வேல செய்யுறவனும் தன்னோட பிள்ளைங்களுக்கு தான் செய்யுற தொழிலை தினமும் காலையில கத்துக் குடுத்துட்டு அப்புறமா பள்ளிக்கு அனுப்புங்கடான்னு அந்தக் காலத்து அக்கிரகாரத்து ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தாரு.

சீப் மினிஸ்டரா இருந்த அவரை உம்ம குலத்தொழில பார்க்கப் போய்யான்னு தமிழ்நாட்டே தொரத்தியடிச்சது.

 அவா அவாளுக்கு விதிக்கப் பட்டதைச் செய்தால்தான் இந்த லோகம் ரொம்பத் திவ்யமா, ஷேமமாயிருக்கும்னு செத்துப்போன சங்கராச்சாரி முதற்கொண்டு, இப்ப உயிரோட இருந்து மத்தவாளைச் சாகடிக்கிற சங்கராச்சாரி வரைக்கும் சொல்ற அருளுரையை சமூக அக்கறை என்ற பெயரில் மூணு மணி நேர படமா எடுத்து நம் தலையில் கட்டியிருக்கும் சேரனை, ராஜாஜியை அனுப்பியதுபோல் பழையபடி சினிமா ஆபரேட்டர் வேலைக்குத்தான் அனுப்ப வேண்டும்.

ஆனா அதுகூட அவங்கப்பாவோட குலத்தொழிலா இருக்க வாய்ப்பில்லையே!

ஒரு பேச்சுக்கு இந்த அப்பன் தொழில் சமாச்சாரத்தை ஒத்துக்கிட்டே ஒரு கேள்வி கேட்கலாம்.

 நம்ம அப்பன், ஆத்தா செய்யுற எந்தத் தொழிலு இன்னைக்கு லாபமா இருக்கு 

 ரிலையன்சும், வால்மார்ட்டும் வந்து தமிழ்நாட்டுல பாதி சில்லறை வியாபாரிகளை காலி பண்ணி தெருவுக்கு தொரத்திட்டான்.

 நாளையே டாடாவும், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் வந்து சேரன் வேலை செய்யச் சொல்லும் பார்பர் ஷாப்பிலும் கால் வைத்து கையில் கத்திரியை பிடிக்கமாட்டார்கள் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?  

அப்பனே பொழப்பத்துப் போய் சோத்துக்கு சிங்கியடிக்கும்போது புள்ள போய் யார் மயிரைப் புடுங்க முடியும்?

இந்தக் கருமாந்திரம் புடுச்ச கதைக்கு மாயக் கண்ணாடின்னு பேரு வச்சதுக்குப் பதிலா வெறுமனே கண்ணாடின்னு அவரு பேரு வச்சிருக்கலாம். என்னதான் கண்ணாடி மூஞ்சியக் காட்டுனாலும் அது வலத்தை இடமாவும், இடத்தை வலமாவும்தானே காட்டும்?

சேரன் சொல்வதுபோல் இன்னைக்கு சம்பாதிக்க அலைகிற இளைஞர்களின் கனவு நாயகன் யாரும் கோடம்பாக்கத்தில் இல்லை. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பில்கேட்ஸ் என்ற பெயரில் இருக்கிறான்.

 அரைகுறை படிப்பாளிகளும் (அல்லது அறிவாளிகளும்) படிக்க வக்கத்துப் போனவர்களுக்குமே கோடம்பாக்கத்தை குறி வைக்கிறார்கள்.

 அவர்களின் முதல் கனவு கூட பணமல்ல, புகழ் பெறும் ஆசைதான்.

குலத்தொழிலு கதைய வுடுங்கண்ணே. சினிமா ஆசையில கெட்டுச் சீரழியாதீங்க, மொதல்ல அதுக்குண்டான தெறமைய நல்லா வளர்த்துக்கங்கன்னு சொல்றாரே… அதுவும் வேணாங்கிறீங்களா?”

ஏம்பா ஒன் நெஞ்சுல கை வச்சி சொல்லு… இப்ப இருக்குற விஜயகாந்து, நெப்போலியன், சரத்குமாரு மாதிரி நடிப்புச் செம்மலுங்க எல்லாம் தன்னோட தெறமையாலதான் சினிமாவுக்கு வந்தாங்களா, இல்ல வந்த பிறகுதான் அந்தத் தெறமைய வளத்துக்கிட்டாங்களா?

 அப்படியில்லாதபோது மத்தவங்களுக்கு மட்டும் ஏன் தகுதி, திறமை அளவுகோலை சொல்றாரு சேரன்.

இது சுத்தப் பார்ப்பனியச் சிந்தனையா ஒனக்குத் தெரியலையா 

 இளைஞர்களுக்கு நல்வழிகாட்டுறேன்னு படமெடுக்கிறவன், தான் எந்த ரூட்டுல உள்ளே போனானோ அந்த ரகசியத்தை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறதுதானே நியாயம்

. அத உட்டுப்புட்டு எப்படியோ இவுங்க உள்ள போய் நல்லா செட்டிலாயிட்டு, புதுசா வர்றவனுக்குவராதேன்னு கதவடைக்குறது அயோக்கியத்தனம் இல்லையா?”mk1.jpgஒருவேளை அவுங்க போன ரூட்டு நாலு பேருக்குச் சொல்ற மாதிரி கௌரவமா இல்லாமலும் இருக்கலாமில்லையா? அப்படி ஒரு அசிங்கமான சமாச்சாரத்தை எப்படிச் சொல்ல முடியும்?”

 இளைஞர்களுக்கான தீப்பந்தம், தீவட்டின்னு விளம்பரத்துல சொன்னா போதுமா? உண்மையைச் சொல்லும் துணிச்சல் கொஞ்சமாவது வேண்டாமா?

 கள்ளப்பணம், விபச்சாரம், கந்துவட்டி, உழைப்புச் சுரண்டல் இல்லாமல் ஒரு தமிழ் சினிமாவை எடுத்துவிட முடியுமா?

 தன் துறையில் மலிந்திருக்கும் இத்தகைய கேடுகளை பற்றிய சுய விமர்சனம் செய்ய வக்கற்றவன் பிற, ஒட்டுமொத்த சமூகத்தின் கேடுகளைச் சாட உரிமை பெறுவது எப்படி 

சாக்கடையாப் போச்சுன்னு சொல்ற அரசியல்வாதிங்ககூட ஒருத்தர இன்னொருத்தவர் விமர்சனம் பண்றாங்க. இன்னும் ஒருபடி மேல போய் தங்களையேகூட சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக்கிறாங்க. 

பாபர் மசூதியை இடிச்சதுக்காக அத்வானி நெறய தடவை அழுதிருக்காரு (!). பா.ச.க.வோடு சேர்ந்த தப்புக்காக ஜெயலலிதா கேட்ட மன்னிப்பில் காம்ரேடுகளே கதிகலங்கி போனார்கள்.

mk4.jpg

இந்தக் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாம சமூக அவலங்களைச் சாட தொடை தட்டி கிளம்புவது ஏன்?

இந்த மாயக்கண்ணாடி கதையை கொஞ்சம் மாற்றி, சேரனுக்குப் பதில் கதாநாயகி நவ்யா சினிமா வாய்ப்புக்காக அலைவதாகக் கதை பண்ணியிருந்தால்…?

ஒட்டுமொத்த தமிழ்ச் சினிமாக்காரர்களின் லட்சணத்தையும் ஒரே வரியில் போட்டுடைக்கிற மாதிரி ஒரே வரியில் படத்தின் கதையை இப்படிச் சொல்லலாம்

:சேரனை கேட்டுக்கு வெளியே நிறுத்திய கோடம்பாக்கம், நவ்யாவை படுக்கையறை வரை அழைத்துச் சென்றிருக்கும்.  

 

திஸ்மாஸ் டி செல்வா   

rajini.jpg 

 

 

அட இப்படிக் கூட நடக்குமா?

நடந்து விட்டதப்பா….’‘

 ரொம்ப நல்ல பயலாச்சே!

எல்லாம் வேஷம்

 கன்னத்தில் கை வைத்தபடி சுப்பிரமணியன் குடும்பமே தெருவில் உட்கார்ந்திருந்தது.

 ஈபி காலையிலேயே வந்து பீஸைபுடுங்கிக் கொண்டு போய்விட்டானாம். 

 காரணம்?

கரண்ட் பில் கட்ட வைத்திருந்த பணம் ஆயிரத்து ஐநூறையும் அப்படியே லபக் கொண்டு சிவாஜி படம் பார்த்து விட்டு வந்திருக்கிறான் அவனுடைய சீமந்தப் புத்திரன்.

எங்களை இருட்டுல படுக்க வச்சது கூடப் பரவாயில்லப்பா… பெத்த பாவத்துக்கு அனுபவிச்சுதான் தீரணும். குடித்தனம் இருக்கிறவங்க என்ன பண்ணாங்க? ஒவ்வொருத்தரும் கேக்குற கேள்விக்கு என்ன பதிலச் சொல்வேன்?’

 பயலை செமத்தியாகக் கவனித்திருப்பான் போலிருக்கு.

 சுருண்டு படுத்திருந்தான்.

டேய் குமாரு… எழுந்திருடா. ..

அசையவில்லை. 

தம்பி ரஜினி குமாரு.. எழுந்திருப்பா செல்லம்

ம்ஹீம்…! எழுந்திருக்க முயன்றான். முடியவில்லை.  

வாங்கிய அடி அப்படி… 

  பொறுக்கி குமாருன்னு கூப்புடு. அதுதான் அவனுக்கு சரியான பேரு

அட சும்மாயிருக்க மாட்டியா சுப்பிரமணி. இரண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதான்.

 எப்படியோ கஷ்டப்பட்டுத் தூக்கி ரஜினியை உட்கார வைத்தோம்.  

சினிமாவில் அடி வாங்கிய வில்லனைப் போல் முகம் வீங்கிப் போயிருந்தான்

.நடந்தது நடந்து போச்சு. இனிமே இப்பிடி ஒரு தப்பை கனவிலயும் நினைக்காத. அப்பன் சம்பாத்தியத்தில படிக்கிற பய நீ திருட்டுத்தனமா சினிமாவுக்குப் போனதே தப்பு. இந்த லட்சணத்துல ஒரு கும்பலையே கூட்டிட்டுப் போயி கரண்டு பில்லுக்குக் கட்ட வேண்டிய காசை காலி பண்ணியிருக்குற…

சுப்பிரமணி பொங்கியெழுந்தான்

.நல்லா கேள்வி கேக்குற போ… இருக்குற இருப்பில கும்பல் வேறயா? இவன் ஒரு ஆளே ஆயிரத்து ஐநூறுக்கும் படம் பாத்துட்டு வந்திருக்கான்.

திடுக்கிட்டேன்.  எத்தனை படமெடா?’‘  

அட… ஒரே படம்தாம்பா...

என்ன அக்குறும்புடா இது.. ஒரே ஆளுக்கு ஒரு படத்துக்கு ஆயிரத்து ஐநூறா? ஏண்டா இப்பிடி பிளாக் வாங்கிப் பாக்கலேன்னா வானம் இடிஞ்சு உன் தலையில விழுந்திடுமாகொஞ்சம் சீக்கிரமாப் போய் லைன்ல நின்னு கவுண்டர்லகூட வாங்கியிருக்கலாமே... 

யோவ்… நெசமாவே நீ இந்த ஊர்லதான் இருக்கியா? சுத்த வௌரங்கெட்டவனா பேசிக் கிட்டிருக்குற… டிக்கெட்டை ஆயிரத்து ஐநூறுக்கு வித்தது பிளாக்குல இல்ல… கவுண்டர்ல தானாம்.

 இதென்ன பகல் கொள்ளை? இன்ன விலையில தான் டிக்கெட்டை விக்கணும்னு அரசாங்கமே சொல்லியிருக்கு. இப்படி இருபது மடங்கு, முப்பது மடங்கு ஏத்தி வித்ததை போலீசு கண்டுக்கலையா?

ரஜினி கலைஞரைக்கண்டுகிட்டதால் போலீசு இவங்களைக் கண்டுக்கல

சிவாஜி படத்தின் வெற்றிக்கு நீங்க எந்த அளவு காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், நன்றி அய்யா என்ற ரஜினியின் மேடைப் பேச்சை படித்திருந்தால் இந்தக் கேள்வியை நீ கேட்டிருக்க மாட்ட…

கிளம்பத் தயாரானேன் .

ஒம் பையன நான் என்னமோ நெனச்சேன். அவன் உண்மையிலேயே ரொம்ப நல்லவன்தான். அதனாலதான் கரண்டு பில்லு காசை மட்டும் எடுத்திட்டு தனியா படத்துக்குப் போயிருக்கான். ப்ரெண்டுகளையும் சேத்துக்கிட்டிருந்தான்னா வீட்டுப் பத்திரத்தை மார்வாடி கடையில கொண்டு வச்சிதான் படத்தைப் பார்த்திருப்பான். நல்ல வேளை நீ தப்பிச்ச.

அண்மையில்தான் அந்த அதிசயம் நடந்தது.  

பாலாறு, பெரியாறு, டாஸ்மாக், டான்சி அனைத்திலும் இரு துருவங்களாக இருந்த திராவிட இயக்கத் தலைமைகளை ஒரே துருவமாக்கி ஒன்றாக்கியது ஒரு மூன்றெழுத்து மந்திரம்.

அது மட்டுமா?

ஒரு துருவத்தின் இரு வேறு துருவங்களான கோபால புரத்தையும், பழைய ஆலிவர் சாலையையும் ஒன்றாக்கியது அந்த மந்திரம்.

அந்த மந்திரம் ரஜினி என்று சொல்லவும் வேண்டுமோ!

சப்பானியர்களே சாமியாடும்போது உள்ளூர் ரசிகர்கள் சும்மாயிருக்க முடியுமா?

என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான். யாரோ ஒருத்தருக்கு ரசிகர்கள்தான்.  

 பதவி வரும், போகும். ரசிகர் பட்டமோ நிரந்தரம். 

 அதனால்தான் வங்கக் கடலில் கொத்து கொத்தாக மீனவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது நகராத கால்கள் குட்லக் பிரிவியூ தியேட்டருக்கு விரைந்தோடின.

  தூங்கவே நேரமில்லை என்றவர்கள் மூன்றரை மணி நேரம் ஒரு இருட்டுக் கொட்டகையில் தேவுடு காத்தார்கள் .

ஆகா…!என வியந்தார்கள்.

பிரமாண்டம்!என புகழ்ந்தார்கள்

.போஸ்டர் ஒட்டவில்லை. அது குனிந்து நிமிர முடியாத முதுமையால்.

 பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யவில்லை. அது பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்து தொலைத்து விட்ட ஒரே காரணத்தால்.

  மற்றபடி எல்லாம் இனிதே நடந்தேறின.  

 போணியாகாத பங்குகளை திடீரென்று அதிக விலைக்கு வாங்கி செயற்கையாக அதற்கு ஒரு விலை மதிப்பை உருவாக்கும் பங்குச் சந்தை சூதாடிகள் போல் தொலைக்காட்சி உரிமம் நான்கு கோடிக்கு வாங்கி சிவாஜியின் கிரேடு உயர்த்தப்பட்டது.

 பெட்டிக்கடை, டாஸ்மாக் இந்த இரண்டையும் தவிர அநேகமாக எல்லா இடங்களிலும் சிவாஜி.  

 ஊடக முதலாளிகள் ஊக வணிகர்களாக மாறினார்கள். 

 படம் பார்க்க வர்றியா, இல்லியா? என ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து கழுத்தில் துண்டைப் போட்டு தியேட்டருக்கு இழுக்காததுதான் குறை.

முந்தானை முடிச்சைப் பார்த்து வீட்டைச் சுற்றி முருங்கை மரம் வளர்த்த அறிவாளிகளின் அடுத்த தலைமுறை இத்தனைக்குப் பிறகும் எப்படித் தாக்கு பிடிக்க முடியும்?

அப்பனின் சம்பளத்தையோ, ஆத்தாளின் தாலியையோ அறுத்துக்கொண்டு ஓடினார்கள்.  

வியர்வையில் குளித்து, லத்தியால் அடி வாங்கி, வேட்டியைப் பறிகொடுத்து வணக்கம் போட்ட பின் வெளியேறினார்கள்.

பத்திரிகையில ஆயிரம் எழுதுவான். என்ன விலைக்கும் டிக்கெட் விப்பான். நமக்குப் புத்தி வேணாமா…என்கின்றன நடுத்தர வர்க்கமும், அறிவு ஜீவிக் கும்பலும்.  

 வழிப்பறிக்காரனிடம் பணத்தைப் பறிகொடுத்தவனை குற்றவாளிபோல் விசாரிக்கும் போலீஸ்காரனாய் சாதாரண மக்கள்மீதே விரல் நீட்டுகின்றன.

புத்தி வேணும்தான்!

ஆனால், அது படம் பார்த்த இவனுக்கு மட்டுந்தானா?

எடுத்தவனுக்கில்லையா? 

திருட்டு சிடி பார்ப்பது குற்றம்தான். ஆனாலும் தயாரித்தவனை மட்டுந்தானே போலீசு நோண்டி நொங்கெடுக்குது. 

கள்ளச்சாராயம் குடித்தவன் ஆஸ்பத்திரிக்குப் போனால், அதை காய்ச்சி விற்றவன் லாக்அப் போகிறானே !

ஆளுக்கொரு தண்டனை அறிவிக்க… இது என்ன நவீன மனுநீதியா?

அதிசயம்.

ஆனால் உண்மைதான். 

சினிமாக் கொட்டகைகளை கள்ளப்பணம் புழங்கும் சந்தைகளாக மாற்றிய ஒரு கும்பல் கள்ளப் பணம் ஒரு தேச விரோதச் செயல் என படமெடுத்திருக்கிறது.

 திருடனாக இருந்த வால்மீகி இராமாயணம் எழுதியதைப் போல் என்றும் இதைச் சொல்லிவிட முடியாது. 

வால்மீகி திருட்டிலிருந்து விடுபட்ட பின்பே கதை எழுதியதாக கதை. 

இவர்களோ தொழிலில் இருந்து கொண்டே அந்தத் தொழிலுக்கு எதிராக கதை எழுதுகிறார்கள்.    

 கள்ளப்பணம் வைத்திருக்கும் எவனும் அதை ஒழுங்காக கணக்குக் காட்டி ஒப்படைக்கச் சொன்னால் செய்ய மாட்டான்.கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் தானே வெளியேவரும்என்ற ஷங்கரின் புரட்சிகரச் சிந்தனை நமக்கு புல்லரிப்பை ஏற்படுத்துகிறது

.பூர்ஷ்வா கும்பலுக்குள் இப்படியொரு பாட்டாளி வர்க்கச் சிந்தனையாளர்களா? 

இந்தப் புல்லரிப்பையும் தாண்டி நமக்கு எழுகிறது வேறொரு கேள்வி.

  முத்து படத்திற்குப் பின் ரஜினியிடமும், அந்நியனுக்குப் பின்ஷங்கரிடமும் கைப்பற்றப்பட்ட கோடிகள் வருமான வரி அதிகாரிகள் கேட்டவுடனேயே ஒத்துக் கொண்டு கொடுத்தவையா   

அல்லது, கவனித்த பிறகு கக்கியவையா? 

இல்லை, சிவாஜி வருவது போல் டங்குவார் தெறிக்க கும்மாங்குத்து விழுந்த அதிர்ச்சியில் ஆடிட்டர்கள் ஆள்காட்டிகளாக மாறிப்போன அவலத்தினாலா?

எப்படி ஷங்கர்? எப்படி?

அமெரிக்காவில் மென்பொருள் துறையில் சம்பாதித்த இளைஞன் தமிழ்நாடு திரும்பி மருத்துவப் பல்கலைக்கழகத்தையும், பொறியியல் கல்லூரியையும் இலவசமாக நடத்த முயற்சிப்பது தான் சிவாஜி படத்தின் கதை.

நிஜ வாழ்க்கையில் சம்பாதிப்பதை கல்யாண மண்டபமாகவும், நட்சத்திர விடுதிகளாகவும் முதலீடு செய்பவர்கள் சினிமாவில் மட்டும் கல்வி வள்ளலாக வேடம் கட்டும் முரண்பாடு ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவில் கோடிகோடியாகச் சம்பாதித்தப் பணம் மட்டுமே பொறியியல், மருத்துவப் பல்கலைக் கழகங்களை உருவாக்கப் போதுமா?

 வேலை நேரம் போக ஓய்ந்த நேரங்களில் அங்குள்ள வங்கிகளைக் கொள்ளையடிக்காமல் இது எப்படிச் சாத்தியமாகும்?

ஜென்டில்மேன் தொடங்கி சிவாஜி வரை கல்வி என்றாலே பொறியியல், ஐ.ஐ.டி. என்று உயர்தர படிப்புகள் மட்டுமே இவர்கள் கண்ணில் தெரியும் மர்மம் என்ன?

ஓராசிரியர் பள்ளி, கரும்பலகை இல்லா பள்ளி, கட்டடமில்லாமல் மரத்தடியில் நடக்கும் பள்ளி இங்கெல்லாம் அமெரிக்க என்.ஆர்.ஐ.களின் கடைக்கண் பார்வை ஏன் பட மாட்டேன்கிறது?   

பஞ்சாயத்துப் பள்ளியில் ரஜினியைப் படிக்க வைப்பது சாத்தியமில்லை என்றோ, விவரணப் படம் போலவோ மாறிவிடும் அபாயமிருக்கிறது என்றோ இவர்கள் கதைக்கலாம். 

உண்மைக் காரணம் அதுவல்ல. 

 அமெரிக்காவில் நம்மவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு’, ‘நம்மவர்கள் அங்கே கணினி துறையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்என்ற அதீதப் புளுகு மூட்டைகளின் பின்னாலிருக்கும் நிஜ உலகத்தைப் பலரும் பார்ப்பதில்லை.  

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஒருபுறம்; இந்தியர்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்கர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஐந்து மடங்கு, பத்து மடங்கு சம்பளம் இன்னொருபுறம். இந்த இரண்டுமே இங்குள்ளவர்களின் தேவையை அங்கு அதிகப்படுத்தியிருக்கிறது.  

 சுருக்கமாகச் சொன்னால் இங்கிருந்து அமெரிக்கா நோக்கிப் பறக்கும் ஒவ்வொரு கணினி புலியும் அங்குள்ள தொழிலாளிகளின் வயிற்றிலடிக்கும் கருங்காலிகளாகவே புறப்பட்டுப் போகிறார்கள். 

  இப்படிப்பட்ட கருங்காலிகளை உருவாக்கி அனுப்பி வைக்கிற கங்காணிகள்தான் ஜேப்பியார், விசுவநாதன், ஏ.சி. சண்முகம், என்.ஆர்.ஐ. சிவாஜி போன்றோர்.   

உலகின் மொத்த கணினி மென்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு வெறும் இரண்டு சதவிகிதம் என்பதும், இன்னமும் அமெரிக்காவின் பங்கு எண்பத்தைந்து சதவிகிதத்திற்கு மேல் நீடிப்பதும் இந்த உண்மையை மேலும் புரிந்து கொள்ள உதவும்.   

 மேலும் சில ஐ.ஐ.டி.கள், அதில் மேலும் அதிக இடங்கள் இவையெல்லாம் நமது மத்திய மந்திரி கொடுத்த உத்தரவாதங்கள். 

 இந்த உத்தர வாதங்கள் இவருக்கு ஓட்டு போட்ட நாட்டு மக்களுக்கு அல்ல;

விருந்தினராகவும் வியாபாரியாகவும் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் இங்கு வந்து போனாரே… பில்கேட்ஸ் என்பவர், அவரிடம்.

 இப்போது புரிகிறதா? கோடிக்கணக்கில் சம்பாதித்த என்.ஆர்.ஐ. சிவாஜி எதற்காக இங்கே ஓடி வந்திருக்கிறார் என்பது.

 பணமிருப்பவன்தான் படிக்க முடியும் என்ற நிலை தனியார் சுய நிதிக் கல்லூரிகளால் ஏற்பட்டது.

 அதற்குத் தீர்வு அந்தக் கல்வி நிலையங்கள் அரசுடைமை ஆக்கப்படுவதில்தான் சாத்தியப்படுமே தவிர, இன்னொரு தனியார் அத்துறையில் நுழைவதால் பெரிதாக என்ன கிழித்து விட முடியும்?    

அரசு நிறுவனங்களில் தரமில்லை என அவதூறுகளை அள்ளி வீசும் தனியார்மய தாசர்கள் பொறியியல், மருத்துவம் படிக்க தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி போன்றதரங்கெட்ட அரசுக் கல்லூரிகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களே… என்ன காரணம்?  

ஆறரை கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசத்தில் என்.ஆர்.ஐ. சிவாஜியால் அதிகபட்சம் எத்தனை பேருக்கு, எத்தனை வருடங்களுக்கு இலவசக் கல்வி கொடுக்க முடியும்? 

கொண்டு வந்த காசை எல்லாம் கட்டடங்களுக்கும், மாமூலுக்கும் செலவழித்தபின் பல்கலைக் கழகங்களை நடத்தவும், சம்பளம் கொடுக்கவும் நம்ம என்.ஆர்.ஐ. சிவாஜியிடம் ஏது துட்டு?

 ஒன்று, துண்டேந்த வேண்டும்.  

 அதற்கு அவரது கவுரவம் இடம் கொடுக்காது. 

  அல்லது கல்லூரியின் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் இலவசம் என்ற சொல்லை எடுத்து விடவேண்டும்.

 எதைச் செய்வார்?கதையில் இப்படியொரு லாஜிக் இடிப்பதை கவனிக்கவில்லையா ஷங்கர்?  

நிச்சயம் கவனித்திருப்பார். 

 இலவசக் கல்வி என்று ஆரம்பிக்கும் திட்டங்களெல்லாம் கடைசியில் பணம் பிடுங்கும் சுயநிதி கல்லூரி நிறுவனங்களாகத்தான் மாறும் என்பதால் அப்படியே விட்டிருப்பார்.  

இப்படி முன் யோசனை கொஞ்சமும் கூட இல்லாத என்.ஆர்.ஐ. சிவாஜி பாதியிலேயே கடை விரித்தேன்; காசில்லை, கட்டி விட்டேன் என பழைய கி.ஆ.பெ. விசுவநாதம் கட்சியை கலைத்துக் கொண்டு போனது போல் விட்டு விட்டு ஓடினால் கல்லூரிகளை எடுத்து நடத்த அரசுதானே வரவேண்டும்!

சர்வீஸ் மைன்ட்டுடன் பல்கலைக்கழகம் நடத்த வந்த என்.ஆர்.ஐ. சிவாஜியை அரசு அதிகாரிகள் அலைக்களிப்பதை, அவமானப்படுத்துவதை கல் நெஞ்சும் கரைய சித்தரிக்கும் ஷங்கர் சுஜாதா ரஜினி கூட்டணி தன் நாட்டுக்கு சேவை செய்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வரும் பொறியாளர்களை, மருத்துவர்களை, மேதைகளை கொஞ்சம்கூட மதிக்காமல் நட்ட நடு சாலையில் வெயிலென்றும், மழையென்றும் பாராது மணிக்கணக்கில் நிறுத்தி அசிங்கப்படுத்துகிறதே அமெரிக்கத் தூதரகம்…

அதை அவமானமாக என்றேனும் எண்ணிப் பார்த்திருக்கிறார்களா?  

 கணினி மேதை என்கிற கருங்காலிகளை விட்டுத் தள்ளுங்கள். சக போட்டியாளர் கமல்ஹாசன், ஹாசன் என்ற முஸ்லீம் சாயல் கொண்ட பெயருக்காகவே நியூயார்க் விமான நிலையத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டாரே!

 தலைமுடி நீளமாக இருந்ததால் தீவிரவாதி என்ற சந்தேகத்தோடு விசா கேட்டுப் போன நடிகர் ஆர்யா விசாரிக்கப்பட்டாரே…!

ஒரு வசனமாகவேனும் இந்த இழிவை எடுக்கும் படங்களில் பதிவு செய்ய முடியுமா?   

முடியாது .

நமக்கு ஆண்டையாகவும், அமெரிக்கனுக்கு அடிமையாகவும் இருக்கும் பார்ப்பன பார்ப்பனிய அடிவருடிக் கும்பல் நிச்சயமாக செய்யாது

.படத்தில் நல்ல விசயங்களே இல்லையா?’

 நிறைய இருக்கிறது. 

 கே.ஆர். விஜயாவோடும், கே.பி. சுந்தராம்பாளோடும் ஜோடி போட வேண்டிய வயதிலுள்ளவர் தன் மகளை விட சின்னப் பெண்ணான ஸ்ரேயாவிடம் சில்மிஷம் செய்திருப்பது.

இருபது வயது வாலிபனாக ரஜினி வருகிறாராமே?’

ஒரு சின்ன திருத்தம். 

இருபது வயது வாலிபனாக அல்ல, இருபது வயது குறைந்த ஒருவராக வருகிறார்.

அதாவது தாத்தா போலிருந்தவர் அப்பா மாதிரி இருக்கிறார்.

 இப்படி மெனக்கெட்டதற்குப் பதில் கதாநாயகி ஸ்ரேயாவின் டோபாவில் கொஞ்சம் வெள்ளைச் சாயம் பூசியிருந்தால் செலவுக்குச் செலவும் மிச்சம், ஜோடிப் பொருத்தமும் ஓஹோ என்றிருந்திருக்கும்.

 தனது அடுத்த படத்தில் ரஜினி இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் செலவைக் குறைத்து தனது சம்பளத்தில் இன்னும் பல லட்சங்களைக் கூட்டலாம். 

 பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா போன்றவர்களை ஒரு கோமாளிபோல் ஆக்கிவிட்டார்களே… 

 உண்மையைச் சொன்னால் பட்டிமன்ற மேடைகளிலும் இவர்கள் கோமாளிகளாத்தான் இருக்கிறார்கள்.

  இயக்குநர் ஷங்கர் இவர்கள் விசயத்தில் பாத்திரம் அறிந்துதான் பிச்சையிட்டிருக்கிறார். 

இதில் கவலைக்குரிய விசயம், நமது பேராசிரியப் பெருமக்களின் சினிமா மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.

 லூஸ் மோகன், ஓமகுச்சி நரசிம்மன், குமரிமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவை நடிகர்கள் பேராசிரியர்களின் படையெடுப்பால் கதி கலங்கி போயிருப்பதாக நம்பகமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கிளைமேக்ஸ் ரொம்பப் புரட்சிகரமா இருப்பதை ஒத்துக்கிறீங்களா?’

 கண்டிப்பாக ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.

 நன்கொடையாவும், ஃபீசாவாகவும் பிடுங்கிச் சேர்த்தவனை அடித்து துவைத்து, அவன் பதுக்கி வைத்திருந்த பணத்தையெல்லாம் வெளியே பறக்க விடுகிறார் சிவாஜி.

 படிக்கிற பசங்க அதை பொறுக்கி எடுத்துட்டு நாம கொடுத்த பணமெல்லாம் இப்படியே திருப்பி நம்ம கிட்ட சேந்துடும் போல இருக்கே என்கிறார்கள் 

  படத்தில். என்னுடைய பக்கத்திலிருந்து படம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இப்படிச் சொன்னார்…  

 இப்பிடியெல்லாம் பொறுக்கித்தனமா படமெடுக்கிறவனை செருப்பாலடிச்சாலும் தப்பில்லைன்னு இவ்வளவு நேரமும் நெனச்சிட்டிருந்தேன். அது ரொம்பத் தப்புன்னு இப்ப புரியுது என்று சொன்னவர், ரஜினி, ஷங்கர், சுஜாதா போன்றோரின் வீட்டு முகவரிகளை ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

 எதற்காம்? 

என்ன செய்யணும்னு ஷங்கரே தெளிவா சொல்றபோது வெட்டியா செருப்பெல்லாம் எதுக்கு? 

எப்படியோ நல்லது நடந்தால் சரி!  சமூக விழிப்புணர்வு